செய்திகள்
கிணற்றில் விழுந்து பலியான மான்கள்

திருவண்ணாமலை அருகே தண்ணீர் தேடிவந்த 9 மான் கிணற்றுக்குள் விழுந்தன

Published On 2017-01-26 09:55 GMT   |   Update On 2017-01-26 09:55 GMT
திருவண்ணாமலை அருகே துரிஞ்சாபுரம் அருகே தண்ணீர் தேடி வந்த 9 புள்ளி மான்கள் கிணற்றில் விழுந்தன. இதில் 5 மான்கள் இறந்தன.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கவுத்திமலை காப்புக்காடுகளில் புள்ளிமான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. காட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வன விலங்குகள் கிராமபுற குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கி விட்டன.

நேற்று இரவு 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக பழைய மண்ணை விவசாய நில பகுதிக்கு நேற்று இரவு வந்தன. சம்பத் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் 9 மான்கள் தவறி விழுந்தன.

இன்று காலை கிணற்றுக்குள் மான்கள் தத்தளிப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மான்களை மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய 4 மான்கள் இறந்த நிலையில் மீட்கபட்டன. ஒரு மானுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 4 மான்கள் காட்டில் விடப்பட்டன.

இதற்கிடையே மான் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற மேலும் ஒரு மானை தெரு நாய்கள் கடித்து குதறின. இதில் மான் பரிதாபமாக இறந்தது. பலியான 5 மான்கள் எரித்து அழிக்கப்பட்டன.

Similar News