செய்திகள்

புத்தேரி பாலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Published On 2017-01-17 10:29 GMT   |   Update On 2017-01-17 10:29 GMT
புத்தேரி பாலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் பாதையில் புத்தேரி பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதும், பூதப்பாண்டி துவரங்காடு பத்மா நகரைச் சேர்ந்த கோலப்பன் மகன் கணேசன் (வயது 23) என்பதும் தெரிய வந்தது. கணேசன் பிணமாக கிடந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணேசன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணேசன் வீடியோ கிராபராக பணியாற்றி வந்ததும், அடிக்கடி குடித்து விட்டு அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததும் தெரிய வந்தது. சம்பவத்தன்றும் கணேசன் வீட்டில் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

ஆனால் பெற்றோர் பணம் கொடுக்காததால் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

Similar News