செய்திகள்

மீஞ்சூர் அருகே சென்னை வாலிபர் குத்திக்கொலை

Published On 2016-12-26 07:01 GMT   |   Update On 2016-12-26 07:01 GMT
மீஞ்சூர் அருகே சென்னை வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வசித்து வந்தவர் அலெக்ஸ் (வயது 22). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அத்திப்பட்டு புதுநகர், பள்ளம் பகுதியில் உள்ள முட்புதரில் அலெக்ஸ் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. அவரது தலை கல்லைப் போட்டு நசுக்கப்பட்டு இருந்தது.

மர்ம கும்பல் அவரை கொன்று உடலை முட்புதரில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. மாயமான அன்றே அலெக்சை மர்ம நபர்கள் கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட அலெக்ஸ் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவர் குடும்பத்துடன் அத்திப்பட்டு புதுநகருக்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அலெக்சின் நண்பர்கள் 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் பெண் தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு யாருடனும் முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Similar News