செய்திகள்

கருணாநிதியை நேரில் சந்திக்க வரவேண்டாம்: கட்சியினருக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தல்

Published On 2016-12-08 07:26 GMT   |   Update On 2016-12-08 07:26 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்கும்படி கட்சியினருக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை பூரண நலம் பெற்றதையடுத்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். எனினும் முழு ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்களை நேரில் சந்திக்க வரவேண்டாம் என கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

​தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று, நேற்றையதினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், அவர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

எனவே தலைவர் கலைஞரைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News