செய்திகள்

வங்க கடலில் ‘வார்தா’ புயல் உருவானது: ஆந்திராவை நோக்கி நகர்கிறது

Published On 2016-12-08 05:15 GMT   |   Update On 2016-12-08 07:42 GMT
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை:

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 1090 கி.மீ தொலைவிலும் மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே தென்கிழக்கில் 1070 கி.மி. தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மான் நிக்கோபர் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டி யுள்ள கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

11-ம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும். கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News