செய்திகள்

வத்தலக்குண்டுவில் லாரி டிரைவர் அடித்து கொலை

Published On 2016-11-27 11:40 GMT   |   Update On 2016-11-27 11:40 GMT
வத்தலக்குண்டுவில் லாரி டிரைவரை அடித்து கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது40) லாரி டிரைவர். சம்பவத்தன்று மாலை ஈஸ்வரன் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் சூதாட்ட விடுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஈஸ்வரனை மயங்கிய நிலையில் சூதாட்ட விடுதியை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டு விட்டு சென்றனர். அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை.

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய அவரது மனைவி நாகமுத்து, கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்களை அழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஈஸ்வரனின் உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உறவினர்கள் அங்கு முற்றுகையிட்டனர்.

சூதாட்ட விடுதியில் ஈஸ்வரனை அங்குள்ளவர்கள் அடித்து கொலை செய்துள்ளார்கள். எனவே போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம சாவு என வழக்கு பதிந்து திசைதிருப்பக் கூடாது என்று வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News