செய்திகள்

நெல்லை பேட்டையில் 19 வயது மாணவனை கடத்திய 30 வயது பெண்

Published On 2016-11-24 12:35 GMT   |   Update On 2016-11-24 12:35 GMT
நெல்லையில் 19 வயது மாணவனை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது50). இவர் நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சூர்யகணேஷ் (19). என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 20-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்ற சூர்ய கணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கல்லூரி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் சூர்யகணேஷ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆகவே தனது மகன் மாயமானது குறித்து அசோக்குமார், பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவர் சூர்யகணேஷ் தன்னை விட வயது மூத்த பெண்ணுடன் சென்றிருப்பது தெரியவந்தது.

மாணவர் சூர்ய கணேசுக்கும், பேட்டையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவர்கள் பேசி பழகுவதை யாரும் தவறாக எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திடீரென மாயமாகி உள்ளனர்.

அந்த பெண் தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு சூர்யகணேசுடன் சென்றிருக்கிறார். அந்த பெண்ணே திருமண ஆசை காட்டி வெளியூருக்கு மாணவரை கடத்தி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.இதனால் போலீசார் அந்த பெண்ணையும், சூர்ய கணேசையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News