செய்திகள்

தஞ்சையில் உதவி பேராசிரியையை தாக்கி 10¾ பவுன் நகை பறிப்பு

Published On 2016-11-05 14:45 GMT   |   Update On 2016-11-05 14:45 GMT
தஞ்சையில் தனியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியையை தாக்கி நகை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பிள்ளையார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 40). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மஞ்சுளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். துணிகளை துவைத்து விட்டு காய வைப்பதற்காக வீட்டின் பின் பக்கம் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் முகத்தில் துணியை வைத்து மறைத்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் மஞ்சுளா வீட்டின் பின் பக்கமாக உள்ளே வந்துள்ளனர். பின்னர் அவர்கள் கட்டையால் மஞ்சுளாவை தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறிய போது அவர் அணிந்திருந்த தாலி செயின், மோதிரம், வளையல் என 10¾ பவுன் நகைகளை பறித்து சென்று விட்டனர்.

உடனே இது குறித்து மஞ்சுளா தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார்.

கொள்ளையர்கள் முகத்தில் துணியை வைத்து மறைத்திருந்தனர். பனியன், டவுசர் அணிந்திருந்தனர். இதனால் அவர்கள் யார்? என்று அடையாளம் தெரியவில்லை என்று போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News