டிராவல்ஸ் அதிபர் கொலையில் கல்லூரி மாணவர் கைது
புதுச்சேரி:
புதுவை பெத்துசெட்டி பேட்டையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் மணிகண்டன். இவர், கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தனது வீட்டு அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர் புஷ்பராஜ் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ரூ.15 ஆயிரம் கடனுக்காக இந்த கொலை நடந்ததும் தெரிந்தது. புஷ்பராஜ் தனது கல்லூரி நண்பர்களான பார்த்திபன், குமரன், தினேஷ், ஆகாஷ், கஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தார்.
லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புஷ்பராஜ், பார்த்திபன், குமரன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
ஆகாஷ், தினேஷ், கஜேந்திரன் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.
இந்த நிலையில் ஆகாஷ் நேற்று இரவு கிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்றனர்.
வீட்டு அருகே பதுங்கி இருந்த ஆகாஷை கைது செய்தனர்.
அவர், இவ்வளவு நாளும் செஞ்சி பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், பெற்றோரை பார்க்க வீட்டுக்கு வந்ததாகவும் கூறினார்.
ஆகாஷ், புதுவை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.