செய்திகள்

தீபாவளி: தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் 28-ம் தேதியே வழங்க உத்தரவு

Published On 2016-10-25 11:49 GMT   |   Update On 2016-10-25 11:49 GMT
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படுகிறது.
சென்னை:

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புத்தாடை வாங்குவதிலும், தங்களுக்கு பிடித்தமான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் களைகட்டியுள்ளன.

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தீபாவளி சனிக்கிழமை வருவதால், பலர் வெள்ளிக்கிழமையன்றே புறப்பட்டுச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தீபாவளி இந்த மாதம் 29 ஆம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும், அரசு ஊழியர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. அதனை பரிசீலனை செய்து, இந்த மாதத்திற்கான சம்பளத்தை 28 ஆம் தேதி வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Similar News