செய்திகள்

ரூ.7 ஆயிரம் போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-10-06 15:21 GMT   |   Update On 2016-10-06 15:22 GMT
போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்:

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டம் சார்பில் நேற்று மாலை கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் கரூர் கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். புள்ளி விவரம் மற்றும் வேலைப்பளு குறைவு என்ற காரணங்கள் காட்டி சம்பளம் குறைப்பதை கைவிட வேண்டும்.

தற்காலிக பணி நீக்கம், வேலை நீக்கம் செய்தலை கண்டித்தல். ஆயுள் காப்பீட்டு ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்தல். போனஸ், பஞ்சப்படி இலாகா ஊழியர்களுக்கு வழங்கும் அன்றே கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வருகிற 14–ந்தேதி புதுடெல்லியில் உள்ள அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது, தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வருகிற 18 மற்றும் 19–ந்தேதி ஆகிய 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News