செய்திகள்

குடிநீர் சீராக வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2016-10-01 17:07 GMT   |   Update On 2016-10-01 17:07 GMT
குடிநீர் சீராக வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி:

அவினாசியை அடுத்த பெருமாநல்லூர் ஊராட்சி 7–வது வார்டில் அறிவொளிநகர், கன்னிமார் தோட்டம்நகர், சி.எஸ்.ஐ.காலனி, தெற்குவீதி மற்றும் கொண்டத்து அம்மன் நகர் பகுதிகளில் 350–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதிக்கு கடந்த ஒருமாதமாக குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

எனவே சீரான குடிநீர் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், கிளைசெயலாளர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. நஞ்சப்பன், மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், பெருமாநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி, ஊராட்சி செயலர் மகேஷ் ஆகியோர் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து வீட்டு இணைப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் சீரான வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News