பரமத்திவேலூர் பகுதியில் வாழைத்தார் விற்பனை ஏலம் அமோகம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். சென்ற வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.2க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250க்கும் ஏலம் போனது.
மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3க்கு விற்பனையானது. சென்ற வாரத்தை விட நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு வாழைத்தார்களின் வரத்து அதிக அளவில் இருந்ததால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.