செய்திகள்

மேலடுக்கு சுழற்சி: வட தமிழகத்தில் 2 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

Published On 2016-09-28 07:56 GMT   |   Update On 2016-09-28 07:56 GMT
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும் இருந்து வருகின்றன.

மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

வடக்கு ஆந்திரா முதல் தெற்கு தமிழகம் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

வட உள்மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரை, தேவகோட்டை, செஞ்சி, புதுச்சேரி, மரக்காணம் தலா 5 செ.மீ., செய்யூர், சிவகங்கை, திருச்சுழி, வானூர், திண்டிவனம், மன்னார்குடி, மயிலம் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News