செய்திகள்

மதுரையில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் வீட்டில் 20 பவுன்-ரூ.24 ஆயிரம் கொள்ளை

Published On 2016-09-25 16:57 GMT   |   Update On 2016-09-25 16:57 GMT
ஸ்கேட்டிங் பயிற்சியாளர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றனர்.

மதுரை:

மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும் கே.புதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் அடிக்கடி நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதுபற்றிய விவரம் வரு மாறு:-

மதுரை கே.புதூர் வளர்நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது31), ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சியாளர். இவரது மாமனார் வீடு புதுக்கோட்டையில் உள்ளது. கடந்த 21-ந்தேதி அலெக்சாண்டர் குடும்பத்தினருடன் அங்கு சென்றார். இதனால் அவரது வீட்டில் யாரும் இல்லை. அந்த வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்ட யாரோ சிலர் திட்டமிட்டு அங்கு உள்ளே புகுந்துள்ளனர்.

நேற்று இரவு வீடு திரும்பிய அலெக்சாண்டர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இது குறித்து கே.புதூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த 20 பவுன் நகை, ரூ.24 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக அலெக்சாண்டர் தெரிவித்தார்.

மேலும் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளுடன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News