செய்திகள்
அன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலி
அன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வெள்ளால பாளையத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 4 வயதில் தனா என்ற மகள் உள்ளார்.
சம்பவத்தன்று தனா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போய்விட்டார். அதிர்ச்சியடைந்த சங்கீதா தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது தனா வீட்டு முன்புறம் உள்ள 3 அடி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.