செய்திகள்

மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு: பள்ளியில் தபால் தலை வெளியீடு

Published On 2016-09-24 14:32 GMT   |   Update On 2016-09-24 14:32 GMT
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்:

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன. அவருடன் சேர்த்து பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். அனைவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

மாரியப்பன் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மாரியப்பன், அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சி செய்வதாக கூறினார்.

சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டிக்கு சென்ற மாரியப்பனுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பெரியவடகம்பட்டி பள்ளியில் அவர் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

Similar News