ஜெயலலிதா பற்றி அவதூறாக பேச்சு: விஜயகாந்த் மீதான வழக்கு அக்டோபர் மாதம் தள்ளிவைப்பு
நாகர்கோவில்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் ஞானசேகர் நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர் ஆக அவர் மதுரை ஐகோர்ட்டில் விலக்கு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வருகிறார்கள்.
கடந்த மாதம் 6-ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, இன்று (7-ந் தேதிக்கு) விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சதிகுமார் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். விஜயகாந்த் சார்பில் வக்கீல் பொன்செல்வராஜன் ஆஜர் ஆனார்.