செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரி உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை

Published On 2016-08-20 02:49 GMT   |   Update On 2016-08-20 02:49 GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரி உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது
சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றியவர் ராஜூ. இவரது மனைவி வளர்மதி. இவர்கள், கடந்த 1991-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து 2004-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 971 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்ததாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையின்போது, வளர்மதி ஆர்.வி.எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை சொந்தமாக நடத்தியதன் மூலம் அவருக்கு தனி வருமானம் கிடைத்ததாக சான்றிதழையும், நகை விற்பனை ரசீதுகளையும் அசோக்குமார் ஜெயின் என்பவர் போலியாக தயாரித்துக் கொடுத்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த 3 பேர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ. சிறப்பு முதன்மை கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், அதிகாரி ராஜூவுக்கும், அசோக்குமாருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், வளர்மதிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் அபராதமும் விதித்துள்ளார்.

Similar News