செய்திகள்

பால்குடி மறக்காத குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தை

Published On 2016-08-07 11:49 GMT   |   Update On 2016-08-07 11:49 GMT
பால்குடி மறக்காத குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தையின் வீடியோ காட்சி வாட்ஸ் அப் பரவி வருகின்றது.

மது பழக்கம் எந்த அளவுக்கு மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை பார்த்திருப்போம்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர்கள் தானும் கெட்டு... தன்னை சுற்றி இருப்பவர்களையும் கெடுத்து விடுவார்கள். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் பலரிடம்... மது குடிப்பதற்கு எப்படி பழகினீர்கள்? என்று கேட்டால், உயிருக்கு உயிரான நண்பனையே கை காட்டுவார்கள். அவர்கள்தான் நிச்சயமாக மதுப்பழக்கத்தையும் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

தமிழகத்தில் மது விலக்கு பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது கடந்த ஆண்டு, வாலிபர்கள் சிலர், சிறுவன் ஒருவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை வைத்து சம்பந்தப்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் பலரும் போதையில் தள்ளாடும் வீடியோக்களும் மதுபழக்கத்தின் வீரியத்தை உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில் தவழ்ந்து பழகிக் கொண்டிருக்கும் பால்குடி மறக்காத 6 மாத குழந்தைக்கு தந்தையே வீட்டில் உள்ள பெண்கள் முன்னிலையில் பீர் கொடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை பார்ப்போம்.

தமிழகத்தில் எந்த பகுதியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. மது ஊற்றிக் கொடுக்கும் தந்தை தமிழில் பேசுகிறார். குழந்தையின் பெயரைச் சொல்லி அழைக்கும் அவர் அப்பா குடிக்கிறேன் பாருடா... என்று கூறுகிறார்.

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் மின்னல் வேகத்தில் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

குழந்தைக்கு மது ஊற்றி கொடுக்கும் இந்த கொடூர தந்தையை கண்டுபிடிக்கும் வரை இதனை அதிகம் ‘ஷேர்’ செய்யுங்கள் என்கிற வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

குழந்தைக்கு பீர் ஊற்றி கொடுக்கும் தந்தையை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

Similar News