- சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆலப்புழா -எக்ஸ்பிரஸ் ரெயிலில் (13351) சேலம் ரெயில்வே போலீசார் தங்கராஜ், அசோகன், கவியரசன், ஸ்ரீநாத் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை பொம்மிடி ரெயில் நிலையத்திற்கும் சேலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே நடந்தது. முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டியில் சோதனை நடத்திய போது பெரிய பேக் ஒன்று அனாதையாக கிடந்தது.
இதையடுத்து போலீசார் அந்தப் பெட்டியில் இருந்த சக பயணிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பேக் யாருடையது என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.