செய்திகள்
234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டி -தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7255 மனுக்களில் 2806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 19ம் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 7255 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்பின்னர் 20ம் தேதி சனிக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மனுக்கள் பரிசீலனை முடிந்தபின்னர், மனுக்களை திரும்ப பெறுவோருக்கு, திங்கட்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி பலர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். குறிப்பாக சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை பெருமளவில் வாபஸ் பெற்றனர். கட்சிகளின் மாற்று வேட்பாளர்களும் மனுக்களை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 234 தொகுதிகளிலும் மொத்தம் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆண் வேட்பாளர்கள்-3585, பெண் வேட்பாளர்கள்-411 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.
மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7255 மனுக்களில் 4442 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.