செய்திகள்
அதிமுகவில் இருந்து என்னை நீக்க அமைச்சர் வீரமணி முயற்சி செய்கிறார்- நிலோபர் கபில் புகார்
அமைச்சர் வீரமணி தொல்லையால் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் கட்சிக்கு சென்றுவிட்டனர். எனக்கும் அவர் நிறைய தொந்தரவு தந்துள்ளார் என்று நிலோபர் கபில் கூறியுள்ளார்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் வீரமணி தொல்லையால் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் கட்சிக்கு சென்றுவிட்டனர். எனக்கும் அவர் நிறைய தொந்தரவு தந்துள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் முஸ்லிம் சமுதாயத்தில் ஓரங்கட்ட தான் செய்வார்கள்.
இஸ்லாமிய சமுதாயத்தினர் என்னை என்னென்னவென்று பேசினார்கள் என்பது எனக்கு தான் தெரியும். (அப்போது அமைச்சர் கண்ணீர் விட்டு அழுதார்)
என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க கே.சி.வீரமணி முயற்சி செய்து வருகிறார். 10 கட்சிகளுக்கு என்னை தொடர்புகொண்டு அழைத்தார்கள். அந்த தவறை ஒரு போதும் நான் செய்ய மாட்டேன். ஜெயலலிதா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன், இரட்டை இலைக்கு விசுவாசமாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.