செய்திகள்

கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன்: அன்புமணி பேட்டி

Published On 2018-06-29 13:44 GMT   |   Update On 2018-06-29 14:56 GMT
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #chennaisalem8wayroad

தருமபுரி:

தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.

ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.

இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.

மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.

நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.

கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad

Tags:    

Similar News