செய்திகள்
கரூரில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: சீமான் பேச்சு

Published On 2017-01-07 05:17 GMT   |   Update On 2017-01-07 05:17 GMT
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார்.
கரூர்:

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும். மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணல் அள்ளுவதால் 33 ஆறுகள் செத்து போய் விட்டது. ஆற்றின் கரையோரம் இருந்த பனை, தென்னை மரங்கள் காய்ந்து போய் விட்டது. விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இன்றி தவித்து வரும் நிலை உள்ளது. விவசாயி செழிப்பாக இருக்கிறான் என்றால் அந்த நாடு செழிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். விவசாயி செத்து கொண்டு இருக்கிறான் என்றால் நாடு சுடுகாடாகிறது என்று அர்த்தம்.

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணம் மணல் அள்ளிய பணம். மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். சிறந்த நீர் வடிகட்டி மணல். நீரும், சோறும் இல்லை என்றால் நாட்டில் புரட்சி ஏற்படும்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாறி, மாறி பேசி வருகிறார்கள். எனவே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். அதே போன்று சேவல் சண்டை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News