செய்திகள்

தலைமை செயலகத்தில் நடத்திய சோதனைக்கு அதிமுக எம்.பி. பாலசுப்பிரமணியன் கண்டனம்

Published On 2016-12-26 14:04 GMT   |   Update On 2016-12-26 14:04 GMT
தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாட்டில் பெருகி வரும் கருப்பு பணத்தை முடக்கும் வகையில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது.

இதையடுத்து, கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.

அதேபோல தமிழக அரசின் பல காண்டிராக்டுகளை எடுத்து நடத்துபவரும் தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அதிகப்படுத்தியது.

சேகர்ரெட்டிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், எனவே சேகர் ரெட்டியின் மோசடியில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்றும் புகார் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவமாக அமைந்தது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனைக்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை மட்டும் அழைத்துச்சென்றது தவறு. தலைமை செயலகத்தில் சோதனை செய்யும் முன் மாநில அரசின் அனுமதி பெறுவது மரபு. ஆனால் தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை கூட்டாட்சி தத்துவம் மீது கேள்வி எழுகிறது.
வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News