செய்திகள்
சீமான், அமீர் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்தபோது எடுத்த படம்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான் பேட்டி

Published On 2016-09-09 04:21 GMT   |   Update On 2016-09-09 11:39 GMT
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று சீமான் கூறினார்.
ராமநாதபுரம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் ஒவ்வொரு ஜீவாதார பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் எதிர்பாராத விபத்துக்களில் பொதுமக்கள் பலியானால் கூட அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் கூறி அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆனால் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறைபிடித்து அவற்றை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கையை சேர்ந்த அமைச்சர் பேசியபோதும் அதற்கு மத்திய அரசோ, பிரதமர் மோடியோ பதில் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

தற்போது காவிரி பிரச்சனையில் தண்ணீர் திறந்துவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனையிலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி தீர்வு காண வேண்டியுள்ளது.

இனிமேலாவது தமிழக மக்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய மக்களாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இயக்குநர் அமீர் உடனிருந்தார்.

முன்னதாக சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரடப்பட்ட வழக்கில் அவர்கள் ஆஜராகாததால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் அவர்கள் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் வக்கீல் சோமசுந்தரம் மனு அளித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Similar News