செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் 3 தலைவர்கள் திடீர் சந்திப்பு
மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன்,அன்புமணி மற்றும் மத்திய மந்திரி சதானந்த கவுடா ஆகியோர் சந்தித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை வந்தார். அவர் அங்கிருந்து காரில் கிளம்பி விருதுநகர் சென்று விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக மாலையில் மதுரை விமான நிலையம் வந்தார்.
முன்னதாக விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மற்றும் மத்திய மந்திரி சதானந்த கவுடா ஆகியோர் சென்னை செல்வதற்காக அங்கு காத்திருந்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கைகுலுக்கி பேசி கொண்டனர். இதற்கிடையே அன்புமணி ராமதாசுக்கு தமிழிசை சவுந்திரராஜன் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து அவரது கையில் ராக்கி கயிறு கட்டி விட்டார். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் சென்னைக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.