லைஃப்ஸ்டைல்

நிச்சயம் - திருமணத்திற்கு இடையில் இளஞ்ஜோடிகளுக்குள் நடப்பது என்ன?

Published On 2017-12-18 08:48 GMT   |   Update On 2017-12-18 08:48 GMT
திருமண நிகழ்வுக்கு தேவையான வேலைகளை எல்லாம் பெற்றோர் செய்துகொண்டிருக்க, இளஞ்ஜோடிகள் இந்த இடைவெளி மாதங்களை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நிச்சயதார்த்தம் நடந்து, பல மாதங்கள் ஆன பின்பே இப்போது திருமணங்கள் நடக்கின்றன. சவுகரியமான இடத்தில் மண்டபத்தை தேடுவது, அழைப்பிதழ் அச்சிடுவது, அவற்றை வினியோகிப்பது, இன்னும் இருக்கும் வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்க நிச்சயதார்த்தத்திற்கும்- திருமணத்திற்கும் இடையே அதிக இடைவெளி கொடுக்கப்படுகிறது. திருமண நிகழ்வுக்கு தேவையான வேலைகளை எல்லாம் பெற்றோர் செய்துகொண்டிருக்க, அந்த இளஞ்ஜோடிகள் இந்த இடைவெளி மாதங்களை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள்?

“முன்பெல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் புதுமணத் தம்பதிகள் மனம்விட்டுப்பேசுவார்கள். அவர்கள் முதலில் தங்களை புரிந்துகொள்ளவே குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அதன் பின்புதான் அவர்கள் மனதொத்து எதிர்கால திட்டங்களை பற்றி பேச முடியும். இப்போது அந்த மாதிரி ‘பிளான்’போடும் வேலைகளை எல்லாம் நிச்சயதார்த்தம் நடந்த உடனே தொடங்கிவிடுகிறார்கள். 

வேலை, குழந்தைகள், சம்பாத்தியம், குடும்ப உறவுகள் போன்ற அனைத்தையும் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். நாங்கள் ஏதோ ரொமான்டிக் கனவுகளில் மிதந்து வழிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து விடாமல், வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து, தெளிவான பாதையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.



டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வசிக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டால் ரொம்ப பிசியாகிவிடுகிறார்கள். இருவரும் அவரவர் தரப்பு நண்பர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைப்பதை பெரிய விழா போன்று நடத்துகிறார்கள். அந்த அறிமுக கூட்டம் பெரிய ஓட்டல்களில் நிறைய பணத்தை செலவிட்டு நடத்தப்படுகிறது. 

பெண் தனது தோழிகளையும், நண்பர்களையும் அந்த அறிமுக விருந்துக்கு அழைக்கிறாள். அது போல் வரனும் தனது தோழிகளையும், நண்பர்களையும் அழைக்கிறார். இரு தரப்பினரும் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறார்கள். அதன் பின்பு அந்த நட்பை நல்லபடியாக பராமரிக்கவும் செய்கிறார்கள். திருமணம் முடிந்த பின்பு அவர்கள் அனைவரும் சேர்ந்து புதுமணத் தம்பதிகளோடு சுற்றுப்பயணம் செல்வதும் நடைமுறையில் உள்ளது.

வட இந்தியாவில் இப்படி சந்திப்பு கலாசாரம் நடந்துகொண்டிருக்க, தென்னிந்தியாவில் இரு தரப்பு குடும்ப அறிமுக நிகழ்வுகள் நடக்கின்றன. அவைகளை பெரும்பாலும் திருமணத்திற்கு பெண்ணுக்கும், வரனுக்கும் தேவையான பொருட்களை வாங்கச் செல்லும்போது நடத்துகிறார்கள். பெண்ணுக்கு பட்டுப்புடவைகள், நகைகள் வாங்கச் செல்லும்போது மாப்பிள்ளை வீட்டினரை அழைக்கிறார்கள். மாப்பிள்ளையின் பெற்றோர்களோடு, அவர்களது நெருங்கிய உறவினர்களும் அந்த ‘ஷாப்பிங்’ நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் மனம்விட்டு பேசி, சிரித்து, மகிழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News