லைஃப்ஸ்டைல்

நேர்மை, நம்பகத்தன்மை வேலையை பெற்றுத் தரும்

Published On 2017-07-11 04:01 GMT   |   Update On 2017-07-11 04:01 GMT
வேலைக்கு உரிய தகுதி உடையவர்கள், நேர்முகத்தேர்வில் இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் நடந்துகொண்டால் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உங்களுக்கு வேலைக்கான நேர்முகத்தேர்வு அழைப்பு வந்திருக்கிறதா? நேர்முகத்தேர்வில் எப்படி அசத்துவது என்று குழம்ப வேண்டாம்.

வேலைக்கு உரிய தகுதி உடையவர்கள், நேர்முகத்தேர்வில் இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் நடந்துகொண்டால் போதும். அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதில், நேர்முகத்தேர்வில் பங்கேற்கும், தகுதி வாய்ந்த நபர்கள், தங்களைப் பற்றிய இயல்பான விஷயங்களை மறைக்காமல் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது என்று தெரியவந்திருக்கிறது.

“நேர்முகத் தேர்வில் பங்கேற்போர், தங்களைப் பற்றிய மிகச் சிறந்த விஷயங்களைத்தான் வெளிப்படுத்த வேண்டும், அப்போதுதான் நேர்முகத் தேர்வு நடத்துபவர்களைக் கவர முடியும் என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், நேர்முகத்தேர்வில் பங்கேற்கும், நல்ல தகுதி வாய்ந்த ‘டாப் 10’ சதவீத நபர்கள், நிஜத்தில் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்துகையில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புக் கூடுகிறது” என்கிறார், லண்டன் பல்கலைக்கழக நிர்வாகவியல் கல்லூரியைச் சேர்ந்த சன் யோங் லீ.



“ஆனால் இந்த விஷயம், நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் தகுதி குறைந்த நபர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் மிகவும் வெளிப்படையாக நடந்துகொண்டால், அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைந்துபோகும்” என்றும் லீ கூறுகிறார்.

தாங்கள் உறுதியாகக் கொண்டிருக்கும் உணர்வுகள், நம்பிக்கைகள் அடிப்படையில் மற்றவர்கள் தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் பங்கேற்போர் கருதுவதன் மீது புதிய ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

பொதுவாக இந்த விதமான மனோபாவம், நேர்முகத் தேர்வில் நல்லவிதமான விளைவையே ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அதோடு, “நேர்முகத் தேர்வைப் பொறுத்தவரை, நாம் நம்மை எல்லாவிதத்திலும் முழுமையானவர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறோம். இந்த விதமான எண்ணமும் செயல்பாடும் தவறு” என்கிறார், இத்தாலி பொக்கோனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செலியா மூர்.

“நம்மை மிகத் தகுதியானவராக காட்டிக்கொள்ள முயல்வதை, நம்பகத்தன்மை அற்றதாகவும், மிகைப்படுத்தலான தகவல்களைத் தருவதாகவும் நேர்முகத்தேர்வு நடத்துவோர் கருதுகின்றனர். ஆனால் நீங்கள் நிஜமாகவே உயர்தகுதி பெற்றவர் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களைப் பற்றிய தகவல்களை நேர்மையாகவும், நம்பகத்தன்மையோடும் கூறலாம். அப்படி நீங்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கையில் உங்களுக்கு வேலைவாய்ப்பு அனேகமாக உறுதி செய்யப்படும்” என்று மூர் கூறுகிறார்.
Tags:    

Similar News