திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவு
- புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
- சுந்தரராஜசாமி, பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. ேநற்று மகா பூர்ணாஹுதியோடு பவித்ரோற்சவம் நிறைவடைந்தது. அதையொட்டி காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மகா பவித்ர பூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப ரோக்ஷணம், நிவேதனம் ஆகியவை சாஸ்திர ரீதியாக நடத்தப்பட்டது.
அதைத்தொர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருடன் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு சக்கரத்தாழ்வாரை பத்மபுஷ்கரணிக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பாரம்பரிய முறைப்படி புனிதநீரில் 3 முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
நிறைவாக மாலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர்களான சுந்தரராஜசாமி, பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.