தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்
- கோவர்த்தனாம்பிகைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் வீரமுருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் நவராத்திரியும், 10-ம் வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 26-ந்தேதி நவராத்தி விழா தொடங்கி நடைபெற்றது. நவராத்திரியையொட்டி கோவர்த்தனாம்பிகைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயதசமி நாளான நேற்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் இருந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க குதிரையில் அமர்ந்து புறப்பட்டு வந்தார்
இதனையடுத்து வன்னிமரத்தில் வெள்ளியிலான அம்புக்கு சர்வ பூஜை நடந்தது. முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வில் அம்பை ஏந்தியபடி தங்க குதிரையில் அமர்ந்தபடி வில் அம்பு மண்டபத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து எட்டுதிக்குமாக அம்பு எய்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரமுருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வில் அம்பு எய்ததை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை முடித்து பிரசாதம் வழங்கப்பட்டது.