வழிபாடு

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

Published On 2022-08-17 07:20 GMT   |   Update On 2022-08-17 07:20 GMT
  • சிவபெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ஒன்று பைரவ அவதாரம்.
  • பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்

தளர்வுகள் தீர்ந்து விடும்

மனந்திரந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்

மகிழ்வுகள் வந்து விடும்

சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை

சிந்தையில் ஏற்றவனே

தனக்கிலை யீடு யாருமே என்பான்

தனமழை பெய்திடுவான் !!

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்

வாரியே வழங்கிடுவான்

தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட

தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்

காவலாய் வந்திடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான்

தனமழை பெய்திடுவான் !!

முழுநில வதனில் முறையொடு பூஜைகள்

முடித்திட அருளிடுவான்

உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்

உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து

முடியினில் சூடிடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான்

தனமழை பெய்திடுவான் !!

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்

நான்முகன் நானென்பான்

தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ரசிப்பான்

தேவைகள் நிறைத்திடுவான்

வான்மழை எனவே வளங்கக்ளைப் பொழிவான்

வாழ்த்திட வாழ்த்திடுவான்

தனக்கிலை யீடு யாருமே யென்பான்

தனமழை பெய்திடுவான் !!

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்

பூரணன் நான் என்பான்

நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை

நாணினில் பூட்டிடுவான்

காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்

யாவையும் போக்கிடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான்

தனமழை பெய்திடுவான் !!

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்

பொன்குடம் ஏந்திடுவான்

கழல்களில் தண்டை கைகளில் மணியணி

கனகனாய் இருந்திடுவான்

நிழல் தரும் கற்பகம் நினைத்திடப் பொழிந்திடும்

நின்மலன் நானென்பான்

தனக்கிலை யீடு யாருமே யென்பான்

தனமழை பெய்திடுவான் !!

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்

சத்தொடு சித்தானான்

புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்

புண்ணியம் செய்யென்றான்

பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்

பசும்பொன் இதுவென்றான்

தனக்கிலை யீடு யாருமே யென்பான்

தனமழை பெய்திடுவான் !!

ஜெயஜெய வடுக நாதனே சரணம்

வந்தருள் செய்திடுவாய்

ஜெயஜெய க்ஷேத்திர பாலனே சரணம்

ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெயஜெய வயிரவா செகம்புகழ் தேவா

செல்வங்கள் தந்திடுவாய்

தனகிலை யீடு யாருமே யென்பான்

தனமழை பெய்திடுவான் !!

Tags:    

Similar News