வழிபாடு

தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2023-06-18 04:48 GMT   |   Update On 2023-06-18 04:48 GMT
  • புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்றது.
  • இன்று கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத்திருப்பலி அசனம் நடைபெறும்.

கமுதி மெயின் பஜாரில், உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடை பெறுவது வழக்கம். அது போல், இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்பு ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அருள்சந்தியாகு மற்றும் அருட்தந்தையர்கள் முன்னிலையில் பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர்.இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

இந்த தேர்பவனியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத்திருப்பலி அசனம் நடைபெறும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின்முறையார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News