வழிபாடு

கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலய கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-02-01 08:47 GMT   |   Update On 2023-02-01 08:47 GMT
  • இன்று மாலை ஸ்ரீநாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது.
  • 2-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயம் உள்ளது.

கோவை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் சாய்பாபா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர். இந்த ஆலயத்திலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

ராமலிங்கம் காலனி ஐயப்பன் கோவிலில் இருந்து நாகசாயி கோவிலுக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, நாகசாயி அர்ச்சனை நடந்தது.

28-ந் தேதி மாலை முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 29-ந் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, 30-ந் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. மாலையில் 5-ம் கால யாக சாலை பூஜைகள், வேதபாராயணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி பூஜை நடைபெற்றது.

8.45 மணிக்கு யாகசாலை யில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும் சமகால மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அனைத்து மூர்த்திகளுக்கும் காலை 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலையிலேயே சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

அவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா அன்னதானமும் நடை பெற்றது.

இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீநாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. 6.45 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று கோவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

2-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. காலை 11 மணிக்கு நாகசாயி அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மாலை 7.45 மணிக்கு தங்கரதம் பவனி வருகிறது. 3-ந் தேதி மாலை 6.45 மணிக்கு மகா திருவிளக்கு பூஜை நடைபெறும்.

Tags:    

Similar News