வழிபாடு

பெரியபட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா

Published On 2022-07-18 04:06 GMT   |   Update On 2022-07-18 04:06 GMT
  • வெள்ளிப்பேழையில் எடுத்து வரப்பட்ட சந்தனம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லா சமாதியில் பூசப்பட்டது.
  • விழாவின் நிறைவாக வரும் 27-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் 121-வது ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

ஜலால் ஜமால் பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் தாரை தப்பட்டை வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்த பின்னர் வெள்ளிப்பேழையில் எடுத்து வரப்பட்ட சந்தனம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லா சமாதியில் பூசப்பட்டது.

இதை தொடர்ந்து உலக அமைதிக்காக சிறப்பு துவா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவ்லீது ஓதி கந்தூரி விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஊர் முழுவதும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்னிசை கச்சேரி, கிராமிய பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்துமத பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வரும் 27-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் காஜா நஜ்புதீன், துணைத்தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல்ஹமீது, செய்யது இபுராம்சா, செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், விழா அமைப்பாளர் அப்துல்மஜீது, அஸ்கர் அலி, அப்துல்ரகீம், தொழிலதிபர் சிங்கம்பசீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News