வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பதை படத்தில் காணலாம்


மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம்

Published On 2022-07-29 06:45 GMT   |   Update On 2022-07-29 06:45 GMT
  • மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
  • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கும்பிட்டனர்

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி,குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக சென்று ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். சிலர் அருள் வந்து ஆடினர்.

இரவு 12.30மணிக்கு அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கும்பிட்டனர்

விழாவை காண்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News