கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது
- வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது.
- தினமும் மாலையில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.
கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலையில் அங்குள்ள கல்யாணசுந்தரவல்லி தாயார் சன்னதியில் தொடங்குகிறது. இதில் சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும். மேலும் தினமும் அதே மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் தாயார் காட்சி தருவார்.
இதையொட்டி அந்த மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தினமும் மாலையில் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.
இதில் இன்று மாலையில் நாதஸ்வர நிகழ்ச்சியும், 27-ந் தேதி பரத நாட்டியம், மிருதங்க கச்சேரி, 28-ந் தேதி கோவிந்த நாம சங்கீர்த்தனம், 29-ந் தேதி கர்நாடக சங்கீர்த்தனம், 30-ந் தேதி சங்கீர்த்தனம், 1-ந் தேதி பரத நாட்டியம், 2, 3, 4-ந் தேதி ஆகிய 3 நாட்களும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.