குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழாவில் பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
- பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முத்தாரம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பகல் 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், இரவு 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுடம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை, அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.