வழிபாடு

திருமலையில் 5 இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது

Published On 2023-05-13 06:36 GMT   |   Update On 2023-05-13 06:36 GMT
  • ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள்.
  • அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

திருமலையில் அனுமன் ஜெயந்தி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை 5 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. மேலும் 16-ந்தேதி தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சம்பூர்ண சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடக்கிறது.

அதையொட்டி திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது:-

அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆகாச கங்கை, ஜபாலி தீர்த்தம், திருமலை கோவில் எதிரில் உள்ள நாத நீராஞ்சன மண்டபம், தர்மகிரி வேத விஞ்ஞான பீடம், பேடி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய 5 இடங்களில் 5 நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நடக்க உள்ளது.

ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள். திருமலையில் உள்ள வேத விஞ்ஞான பீடத்தில் 16-ந்தேதி காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 18 மணி நேரம் அகண்ட பாராயண யாகத்தை 67 அறிஞர்கள் நடத்துகிறார்கள்.

அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்கலாம்.

ஆஞ்சநேயரின் பிறந்த இடத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் கருத்துத் தெரிவிக்கலாம். புராணங்கள், வரலாற்றுத் தகவல்கள், ஆதாரங்களுடன் அஞ்சனாத்ரி அஞ்சநேயரின் பிறந்த இடம் என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது.

இது பற்றிய விவரங்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதற்கு பதில் அளிக்க திருப்பதி தேவஸ்தான பண்டிதர்கள் குழு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணை வேந்தர் ராணிசதாசிவமூர்த்தி, அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் விபீஷண சர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News