வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-09-03 04:51 GMT   |   Update On 2022-09-03 04:51 GMT
  • 10-ந்தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
  • 11-ந்தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி முன்பு காலை 9.25 மணிக்கு மேள, தாள, பஞ்ச வாத்திய வெடி முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

கொடிப்பட்டத்தை மாத்தூர் மடம் தந்திரி சஜித் நாராயணரூ கொடிமரத்தில் ஏற்றினார். பின்னர் கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், வட்டப்பள்ளி மடம் ஸ்தாணிகர் டாக்டர் பிரசாத், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மரபு படி கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிபட்டத்தை மேள, தாளத்துடன் கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனியும், 9-ம் திருவிழாவான வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அமர செய்து நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான 11-ந் தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

Tags:    

Similar News