ஆன்மிகம்
கள்ளழகர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்- 25 ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.
வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று விமரிசையாக நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெறும்.
மேற்கண்ட நாட்களில் காலை வேளையில் சுவாமி கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி எதிர்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.
மேற்கண்ட நாட்களில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருள் வார்கள்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 4.45 மணி முதல் 5.45 மணிக்குள் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டு கள்ளழகர் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
மார்கழிமாத பிறப்பினை முன்னிட்டு கள்ளழகர் கோவில் மற்றும் இதன் உபகோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆகிய 3 கோவில் களில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி கள்ளழகர் பெருமாள் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 12 மணி சாத்தப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு திறக் கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படும்.
இதேபோல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 11. 30 மணி சாத்தப்படும். மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி நடை சாத்தப்படும்.
மேற்கண்ட தகவலை கோவில் உதவி ஆணையர் அனிதா தெரிவித்துள்ளார்.