search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "margazhi thiruvizha"

    பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உடன் விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு தனூர் மாத பூஜையும் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு விளா பூஜையில் முருகனுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளைநிற மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    மார்கழி மாத கார்த்திகை விழாவையொட்டி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தரிசனத்துக்கான அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

    108 விளக்கு பூஜை நடந்ததை படத்தில் காணலாம்.

    6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 57 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா நடந்தது. அதையொட்டி பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் முருகப்பெருமான் பூந்தேரில் பவனி வந்தார். இதில் பாலமுருகன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளுக்கு பூஜை நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் கொடிபட்டத்தை கோட்டார் - இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியர் சமுதாயத்தினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளத்துடன் ஊர்வலமாக நான்கு ரதவீதிகள் வழியே கொண்டுசென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

    நேற்று காலை 9.35 மணிக்கு மேளதாளம், பஞ்சவாத்தியத்துடன் கொடிபட்டத்தை கொடிமரத்தில் திலீபன் நம்பூதிரி ஏற்றிவைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் சந்துரு, ஆ.கே.ஆறுமுகம், நாகத்தாய், சாஜின் காந்தி, ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், சுவாமி பத்மேந்த்ரா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கொடியேற்றம் முடிந்த பின்னர் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து ரதவீதிகள் வழியே திருமுறை பேரவை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் திருவாவடுதுறை ஆதீனம் சென்றடைந்தது. தொடர்ந்து தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கோவில் கலையரங்கத்தில் சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகத்தினர் சார்பில் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி போன்றவை நடைபெறுகிறது.

    9-ம் திருவிழாவான 22-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கமும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி மாவட்ட கலெக்டர் பிரசாத் வடநேரே உத்தரவின்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேரோடும் ரதவீதிகளில் செப்பனிடும் பணி நடந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி பேரூராட்சி நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் கோவில் தெப்பக்குளத்தில் பைபர் படகுகளுடன் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுசீந்திரம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×