ஆன்மிகம்
மருதமலை சுப்பிரமணி சுவாமி கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-05-27 08:22 GMT   |   Update On 2020-05-27 08:22 GMT
ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடக்குமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
கோவையை அடுத்து பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகனின் 7-ம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வார்கள்.

இதுதவிர நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா, வைகாசி விசாகத்திருவிழா, சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது தேர்த்திருவிழாவும் நடக்கும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் வருகிற மாதம் (ஜூன்) 4-ந் தேதி வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பல்வேறு தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று தளர்வு வழங்கப்பட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-

ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் மன அமைதி பெறவும், குடும்பத்துடனும், சமுதாயத்துடனும் இணைந்து இறைவனை வழிபடவும் வழிபாட்டு தலங்கள் பெரிதும் உதவின. வழிபாட்டு தலங்களில் ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக, வெளியூர்களில் வசிப்பவர்களும் தங்களது பூர்வீக ஊருக்கு வந்து உறவினர்களுடன் இணைந்து இறைவனை வழிபட்டு மகிழ்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடிக் கிடக்கின்றன. ஊரடங்கு 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு சில விதிமுறைகளை வகுத்து கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். அந்த வகையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா நடைபெற அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.

இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
Tags:    

Similar News