ஆன்மிகம்
கோட்டை மாரியம்மன்

கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது

Published On 2019-07-23 06:07 GMT   |   Update On 2019-07-23 06:07 GMT
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. இதற்காக கோவிலில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவிழாவையொட்டி தினமும் காலை, மதியம் மற்றும் இரவில் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள், வழிபாடு நடைபெறுகிறது. விழாவையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைத்தல், 7 மற்றும் 8-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடைபெறுகிறது.

9-ந் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், 13-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலம், 1008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட நறுமண பொருட்களுடன் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் அன்று மதியம் 1 மணிக்கு அலங்கார ஆராதனையுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதில் சேலம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராசாராம், தக்கார் உமாதேவி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News