ஆன்மிகம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது

Published On 2019-06-12 04:12 GMT   |   Update On 2019-06-12 04:12 GMT
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 23 -ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் பொங்கிவரும் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் 28 -ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 26-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 27-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 28-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 29-ந் தேதி பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜை, காலை 10 மணி முதல் மாவிளக்கு, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 2-ந் தேதி பகல் 12 மணிக்கு அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 3-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆடி 18-ம் பெருக்கு, 5-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை, 6-ந் தேதி காலை 8 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும் செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News