ஆன்மிகம்
கிருஷ்ணரின் பால்ய நண்பராக இருந்தவர் சுதாமா. இவரை குசேலன் என்றும் அழைப்பார்கள். இவருக்கு கிருஷ்ணன் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரின் பால்ய நண்பராக இருந்தவர் சுதாமா. இவரை குசேலன் என்றும் அழைப்பார்கள். மன்னர் பரம்பரையில் வந்த கிருஷ்ணரும், ஏழ்மையான அந்தண குடும்பத்தில் பிறந்த சுதாமாவும் எந்த வேற்றுமையும் இல்லாமல் பழகி வந்தனர். அவர்கள் கல்வியை முடித்ததும் பிரிந்து விட்டனர்.
மனைவி, குழந்தைகள் என்று ஆன பிறகு, சுதாமாவின் வாழ்க்கை மிகவும் வறுமையில் கடந்தது. அந்த ஏழ்மையை அகற்ற, சிறு வயது நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்டு வரும்படி, சுதாமா விடம் அவரது மனைவி கூறினாள். கிருஷ்ணரை பார்க்க செல்லும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதால், ஒரு துணியில் கொஞ்சம் அவல் எடுத்துச் சென்றார். சுதாமாவைப் பார்த்ததும், ஆனந்தம் அடைந்த கிருஷ்ணர், அவரை அன்புடன் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் பாதங்களை தானே கழுவினார். அவர் கொண்டு வந்த அவலை வாங்கி உண்டார். ஆனால் கிருஷ்ணரிடம் உதவி எதையும் கேட்கவில்லை சுதாமா. கிருஷ்ணரை சந்தித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார் சுதாமா.
அங்கு தன்னுடைய வீடு அரண்மனை போல் மாறியிருப்பதையும், பொன், பொருள் குவிந்து கிடப்பதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார். தான் கேட்காமலேயே தன்னுடைய வறுமை வாழ்வை அகற்றிய அந்த இறைவனுக்கு சுதாமா நன்றி கூறினார்.