ஆன்மிகம்

உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-04-15 05:37 GMT   |   Update On 2019-04-15 05:37 GMT
சித்திரை திருவிழாவையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி அளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வீதியை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணி அளவில் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தப்படி நிலையை வந்தடைந்தது.

கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது சாலையில் வெயிலின் தாக்கம் இருக்காத வகையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. முன்னதாக தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பய, பக்தியுடன் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி அம்மன் நேற்று இரவு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து உறையூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சித்திரை திருவிழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை இரவு 8 மணிக்கு காப்பு கலைதல், விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News