ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம்: யானை, அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

Published On 2018-10-16 03:18 GMT   |   Update On 2018-10-16 03:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனம், இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி, ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக சென்றன. ராமர், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர்.



வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி (பொறுப்பு), கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் ரமேஷ், பறக்கும்படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை தங்க யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கிறது. 
Tags:    

Similar News