ஆன்மிகம்
ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி அலங்காரத்திலும், இரவு கல்கி அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருப்பதி பிரம்மோற்சவம்: ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமி தேரில் பவனி

Published On 2018-09-21 04:44 GMT   |   Update On 2018-09-21 04:44 GMT
திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக சென்றன.

தேரோட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராயப்பாடி சாம்பசிவராவ், சுதா நாராயணமூர்த்தி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, பறக்கும் படை அதிகாரி ரவீந்திராரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் உற்சவர்களை ஊஞ்சல் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

வெங்கடேசப் பெருமாள் அடுத்து எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துக்கு முன்னோட்டமாகவும், ஏற்கனவே எடுத்த ஹயக்ரீவ அவதாரத்தில் குதிரை முகத்துடன் அவதரித்ததை நினைவுக்கூறும் வகையிலும் குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News